Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : 'தி.மு.க.,வைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., இன்பதுரை, டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்த புகார்: சென்னை சேப்பாக்கத்தில், சில தினங்களுக்கு முன், தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் சம்பத் என்பவர், எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பற்றி அநாகரிகமாக பேசினார்.
தற்போது, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை பற்றி, 2017ல் மேடையில் அவதுாறாக பேசினார். அவர் மீது, பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் தான் உள்ளது. சம்பத்துக்கு, 2015ல் திடீரென மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்புஉள்ளதாக தெரிகிறது. எனவே தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து, அநாகரிகமாக மேடைகளில் பேசி வருகிறார். அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.